08 மார்ச் 2017

மகளிர் தினம் என்றொரு நாளில்.

பெண்ணே! 
தேடுவதும், நாடுவதும் உன்னுள்ளிருக்க.
ஒட்டுக்கும் ஓய்வுக்கும் ஓய்ந்து நீ தவிக்க

பட்டுடன் திட்டையும் பரிசாய் தந்து
பங்குனி எட்டில் சங்கெடுத்தூதி
பெண்ணே நீ யென்றால் மயங்கிடுவாயோ?
ஆணும் பெண்ணும் சமமென சொல்லி
ஆகாசம் முதல் அடியாழம் சென்று
சாதனை மகளீர் சரித்திரம் படைத்திட்டாலும்
உடலுக்கும் உடமைக்கும் உரிமை யில்லை
உடமைகள் இழந்தவள் உயிருக்கு மதிப்புமில்லை
நள்ளிரவில் நடுத்தெருவில் நகைகளோடு
நீ நடக்கும் நாள் உன் விடுதலை நாளாம்.
பொன்னகையென்னும் விலங்கினை மாட்டி
புன்னகையுடன் தன்னந்தனியே
ஏகாந்தமாய் நிலவினில் நடக்கும் காலம்
பெண்ணுக்கென்ன ஆணுக்குமில்லை
என்றதோர் உண்மை உனக்கெப்போ புரியும்?
புன்னகை அணிந்த பெண் நகை புரிந்தால்
பொன் நகை வெட்கம் அடைந்திடும் காலம்
என்று தான் வருமோ அன்றே உன் மீட்சியென்றே
நீ உணர்வதெப்போ பெண்ணே ?
மகளின் தினமொன்றொரு நாளில்
மயக்கிடும் வார்த்தை ஜாலங்களோடு
நாட்டின் கண் நீயென போற்றிடுவோரை
நேற்றும் நாளையும் யாருக்கானதெனும்
நாளாயிருந்ததென ஒரு வார்த்தை கேளேன்.
நேற்று நீ யாராயிருந்தாய்? நாளை நீ  யாராயிருப்பாய்?

என்றும் நீ பெண்ணாயிருக்க  இன்று மட்டும்   
மேதையாக்கி பேதையாக்கும்  வேதனை வேண்டாம் 
எ’ல்லா நாளும் உந்தன் நாளென்றுணர்ந்து
நிமிர்ந்தே  நிற்பாய்!

தாயே சேயே போற்றிடும் நாவே 
நாயே பேயே  தூற்றிடும் நாளை 
நாளும் மாறும் நாவினை கொண்டோர் 
வாழ்த்துனக்கென்றும் வேண்டாம் 
என்றுரத்தே உரைப்பாய்!

6 கருத்துகள்:

  1. அருமை மகளிர் தின வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. ,//நாளும் மாறும் நாவினை கொண்டோர்
    வாழ்த்துனன்னென்றும் வேண்டாம் எனுரத்தே உரைப்பாய்!//

    மிக அருமையான வரிகள் .ஒரு நாள் மட்டும் போற்றுதல் வாழ்த்துதல் , மதித்தலும் பின்பு வருடமெல்லாம் மிதித்தலும் எனக்கு உடன்பாடில்லை .பெண்களை பெண்களாக மதிக்காவிடினும் சக மனிதராய் மதித்தாலே போதும் ..பிறர் மதிக்க முதலில் பெண்கள் தங்கள் சுய மரியாதையை அற்ப போற்றுதலுக்கு இழக்காமலிருந்தாலே போதும்

    பதிலளிநீக்கு
  3. அருமை...

    இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள் - என்றும்...

    பதிலளிநீக்கு
  4. மகளிர் தின நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. இந்த கவிதை மூலம் ஏதோ சொல்ல வறீங்க என்று மட்டும் புரியுது ஆனால் என்ன சொல்ல வரீங்க என்று மாட்டு எனக்கு புரியல இருந்தாலும் என் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. தாமதத்திற்கு வருந்துகிறோம் . இணையம் இல்லாததால் வர இயலவில்லை..

    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!